வணிக கட்டமைப்பு

ரு பிசினஸ் வெற்றியடைய வேண்டுமெனில், சரியான ஸ்ட்ராட்டஜி மட்டும் இருந்தால் போதாது; சரியான ஸ்ட்ரக்சரும் இருக்க வேண்டும். ஸ்ட்ரக்சர் என்றால்..?

கட்டமைப்பு என்று சொல்லலாம். ஒரு வீடு கட்டுகிறோம். நம் இஷ்டத்துக்கு அதை நாம் கட்டிவிடுவதில்லை. ஒரு மாடி வீடு எனில் அதற்கேற்ப அடித்தளம் அமைக்கிறோம். இரண்டு மாடி வீடு எனில் அடித்தளத்தை இன்னும் கூடுதல் வலிமையுடன் அமைக்கிறோம்.

மூன்று மாடி, நான்கு மாடி, எட்டு மாடி என்று அடுக்குகளின் எண்ணிக்கை உயர உயர, அடித்தளத்தை வலிமையாக அமைக்கிறோம் அல்லவா? அதுபோலத்தான் பிசினஸும்.

ஆரம்பத்தில் நீங்கள் ஒருவரே பிசினஸ் தொடங்கி செய்து வந்திருக்கலாம். அப்போது உங்கள் பிசினஸுக்கு பெரிய அளவில் கட்டமைக்க தேவை இருந்திருக்காது. எளிமையான கட்டமைப்பு (சிம்பிள் ஸ்ட்ரக்சர்) உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், உங்கள் பிசினஸை எப்போதும் நீங்கள் ஒருவர் மட்டுமே செய்யப்போவதில்லை. அதன் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு இடங்களில் பல்வேறு கிளைகளைத் திறக்கப் போகிறீர்கள். பல நூறு ஆட்களை வேலைக்கு சேர்க்கப் போகிறீர்கள். அப்போது உங்கள் நிறுவனம் ‘காம்பவுன்ட் ஸ்ட்ரக்சர்’ என்கிற சிக்கலான அமைப்பைப் பெறும். அப்போது பிரச்னை எதுவும் உருவாகாமல், உற்பத்தியைப் பெருக்கவும்  லாபத்தை அதிகரிக்க வழிசெய்து தருவதே இந்த ஸ்ட்ரக்சர்.

உங்கள் பிசினஸில் சரியான ஸ்ட்ரக்சர் இல்லை என்றால் என்ன ஆகும்?

ஒரே டிபார்ட்மென்ட்டில் பல பேர் இருப்பார்கள். இருக்கிற வேலையை ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துக் கொண்டு செய்துவிட்டு, மீதமுள்ள நேரத்தை கதை பேசிக் கழிப்பார்கள். ஆனால், சில டிபார்ட்மென்ட்டில் போதுமான ஆட்களே இருக்க மாட்டார்கள். இதனால் அதிக வேலையை ஒரு சில நபர்களே மாய்ந்து மாய்ந்து செய்ய வேண்டியிருக்கும்.

இதனால் உற்பத்தி பெருகாது. உற்பத்தி பெருகாதபோது நாம் அடைய நினைத்த இலக்கையும் அடைய முடியாது. அப்போது லாபமும் வராது. இதனால் நம் பிசினஸ் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்குப் பதிலாகத் தேயத் தொடங்கிவிடும்.

எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதன் வளர்ச்சிக்கு ஏற்ப அதன் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு உற்பத்தி நிறுவனத்தை எடுத்துக் கொள் வோம். உற்பத்தி என்று வரும் போது ஒரு புரடக்‌ஷன் மேனேஜர்,  உற்பத்தி செய்ய நினைக்கும் பொருட்களைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை வாங்க ஒரு பர்ச்சேஸ் மேனேஜர், மூலப்பொருட்களை வாங்கிய பின் அவற்றை ஸ்டோரில் வைத்து தேவைப்படும்போது தர ஒரு ஸ்டோர் மேனேஜர், தயாரான பொருட்களை  சந்தைக்குக் கொண்டு செல்ல ஒரு  மார்க்கெட்டிங் மேனேஜர், விற்ற பொருட்களுக்கான பணம் திரும்ப வந்தவுடன் அதைக் கணக்கில் வைக்கிற அக்கவுன்ட்ஸ் மேனேஜர்,  எல்லா ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் ஹெச்.ஆர்.  மேனேஜர்… இப்படி ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ற நபரை நன்கு ஆராய்ந்து தேடி நியமித்தால், நம்  இலக்கை நம்மால் எளிதாக அடைய முடியும்.

சிலர் காலை ஆறு மணி முதல் இரவு 12 வரை கஷ்டப்பட்டு தொழில் செய்வார்கள். தூங்கக் கூட அவர்களுக்கு  போதிய நேரம் இருக்காது. ‘நான் ஒரு நிமிடம் இல்லாவிட்டால்கூட பிசினஸ் நடக்காது’ என்பார்கள்.  அவர்கள் தங்களது  பிசினஸில் சரியான ஸ்ட்ரக்சரை உருவாக்காமல் போனதினால் தான் இந்த நிலை.

இந்த கட்டமைப்பு எல்லா நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, ஒரு ஸ்டார் ஹோட்டலை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு இருக்கும் ஸ்ட்ரக்சர் வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், ஒரு சாதாரண ஹோட்டலில் அது மாதிரியான ஸ்ட்ரக்சர் தேவைப்படாது. அங்கு வேறு மாதிரியான ஸ்ட்ரக்சர் தேவைப்படும். எனவே, நம் பிசினஸுக்கேற்ற ஸ்ட்ரக்சரை நாம் உருவாக்கிக் கொண்டால்தான், நாம் அடைய நினைக்கும் இலக்கை எளிதில் எட்ட முடியும்.

பல நிறுவனங்களில் இந்த ஸ்ட்ரக்சர் சரியாக வடிவமைக்கப் படாமல் போவதால்தான், அந்த பிசினஸ் தோல்வி அடையும் நிலைக்குச் செல்கிறது. உங்கள் பிசினஸில் நீங்கள் எப்படிப்பட்ட ஸ்ட்ரக்சரை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்து நீங்கள் செய்யவேண்டியதை அடுத்த இதழில் சொல்கிறேன்.

Leave a comment

Filed under Uncategorized

கற்றது ஒழுகு

ஆடம்பர வாழ்க்கை
தேவையான அவசர
உலகம் இது!
ஆகவேதான்
சுயநலம் உன்னை
சூறையாடிக்கொள்கிறது!

ஊடகங்கள்கூட
உறிஞ்சிக்கொள்கின்றன
விஷத்தை!
அறிவாளிகள் கூட
அகப்பட்டுக் கொள்கின்றனர்
இவற்றில்!

விவாதங்கள்;
வெற்றிப் பெறலாம்
அது
அவனவன்
திறமையைப் பொறுத்தது!

வேர்கள்
அறிய வேண்டும்
விளை நிலம்
அறிய வேண்டும்
விவசாயியையும்
அறிய வேண்டும்!

ஆண்டவனை நம்பும்
ஆன்மிக வழியிலும்
விண்ணை முட்ட எண்ணும்
வியாபார வழியிலும்
அமைதியை நாடும்
அன்றாட பொழுது போக்கிலும்
எங்கெல்லாம்
உனக்குப் பிரியமுண்டோ
அங்கெல்லாம்
வாழைப்பழத்தில்
ஊசியைப்போல்
வஞ்சசகர்கள்
நஞ்சை கலக்கின்றனர்!

பாசமுடன்
ஊட்டுகின்றார்
அவசரப்பட்டு
அள்ளி உண்டுவிடாதே
அழிந்து விடும் இனமே!

அறிவை பயன்படுத்தி
அவற்றை அழித்துவிடு
இல்லையேல்
அவற்றிலிருந்து
அமைதியாக விலகிவிடு!

படித்தவன்
பயங்கரவாதம்
பாலில்தான்
விஷம் கலக்கும்!

Leave a comment

Filed under God, Life

நினைவுகளாய் வெடிக்கும் தீபத்திருநாள்

vilaku1

எங்களின் தீபாவளி
ஒரு மாதத்திற்கு
முன்பே தொடங்கிவிடும்

காலண்டரின் தேதி
கிழிகையில்
மனதில் நாட்களின்
எண்ணிக்கை குறையும்

வகுப்பிலும் தெருவிலும்
வாங்கும் பட்டாசும்
உடுத்தபோகும் ஆடையின்
பேச்சாயிருக்கும்

தூப்பக்கியே
எங்களின்
தீபாவளி
தொடங்கிவைக்கும்

அப்பாவுடனும்
அம்மாவுடனும்
தொடங்கும்
எங்கள் பட்டண பிரவேசம்

அம்மன் சந்நிதியுளும்
திலகராஜில்  தொடங்கும்
தேடல் வேட்டை
வாசன் ஜவுளியில்
வந்து முடியும்

எனக்கும் பேண்ட் வேணும்
என கேட்டுக்கும்
தம்பியின் அழுகை
கரும்பு சாறில் சமாதான படுத்தப்படும்

அந்த புதிய வாசனை
முகர்ந்து பார்க்க
திட்டுகளை பொருத்து கொண்டு
எடுத்து எடுத்து பார்போம்
அலமாரியில் இருந்து

முறுக்கு பிழிகிறேன்
என்று எண்ணெய்
சுட்டதும் வலிக்கவில்லை

சாமிக்கு வைக்காமல்
தரப்படுவதிலை தின்பண்டங்கள்
ஆயினும்
வெண்ணை திருடிய கண்ணாய்
முறுக்கு திருடினோம்

என்றும் சோம்பலாய்
எழும் நாங்கள்
அன்று மட்டும்
சூரியனக்கு முன்பாய்
கண் விழிப்போம்

எண்ணெய் குளியலுமாய்
வேகும் கறி மணமாய்
தீபாவளி தொடங்கும்

சித்தப்பன் கைபிடித்து
சரஸ்வதி
லட்சுமி
பொருளாதார தடை விதிக்காத
அணுகுண்டுகளை
வெடித்து மகிழ்ந்தோம்

தெருவெங்கும்
குப்பையாய்
அடுத்தநாள்
வெடிக்காத வெடி தேடி
வீதியில் திரிந்தோம்

அத்தையும் மாமனும்
சித்தியும் சித்தப்பாவும்
தாத்தாவும் பாட்டியும்
என
சந்தோசமாய் கொண்டாடிய
தீபாவளி அது
அந்த சந்தோசத்தின்
அடையாளமாய் இன்றும்
கையில் உண்டு
வெடி வெடித்த தழும்பு

அன்று
சொந்தங்கள் சூழ
உண்டும்
வெடித்தும்
அந்த தீபாவளி
நினைவாய் மட்டுமே

இன்று
வேலைகாரணமாக
வெளிநாட்டில் (வெளிஊரில்)
தனித்து இருக்கையில்
இனிக்கவில்லை
இந்த தீபாவளி !

– பாண்டிய இளவல்

Leave a comment

Filed under Deepavali, Diwali, Life

அறம் செய விரும்பு

IMG_15507223841822 உதவி என்பது கடவுள் தன்மையைக் கொண்டது. உதவுபவர் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். கடவுள் என்பவர் ஆபத்தில் உதவவே அழைக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது உதவியதன் நன்றியாகவே அவரை கையெடுத்து வணங்கப் பழகியிருக்கலாம். உயிருற்று இருக்க ‘உதவும்’ நிலம் நீர் காற்று வானத்திற்கே கடவுளுக்கு நிகரான இறைவணக்கங்கள் செய்யப் பழக்கப்பட்டது. உதவி இல்லையேல் மனிதரின் வாழ்க்கையில் சமதர்ம செழுமையிராதுப் போயிருக்கும். உதவி இல்லையேல் மனிதத் தனம் குறைந்துப் போகும். மனிதநேயம் குறைந்து சுயநலப் புழுக்களாய் பயனற்று போயிருப்போம் நாம்.

ஒரு இலை காற்றில் அசைகிறது, காம்பின் ஒரு பகுதி காற்றின் எதிர்புறம் மடிந்து இலையாட, எதிர்பாராவசமாக காம்பொடிந்து இலை உடனே கீழ்விழும் நிலையில் அந்தரத்தில் தனித்துத் தொங்குகிறது. சற்று நேரத்திற்கெல்லாம் காற்று மறுபுறம் வீச, அந்த அறுந்தக் காம்பும் ஒடிந்து இலையறுந்து மரத்தின் தொடர்பறுந்து அநாந்தரமாய் கீழே விழுகிறது. காற்றின் அசைவிற்கு ஆடி ஆடி தவழ்ந்து இங்குமங்குமாய் அலைமோதி யாருமற்ற வெளியில் அனாதையாய் வந்து விழுகிறதந்த இலை. அப்படி யாருமற்று விழும் மனிதரை பற்றிப் பிடித்து தன் மார்பில் அணைத்து நானிருக்கேன், நானிருக்கேன் கவலையை விடுங்கயென்றுச் சொல்ல ஒரு கை ஒரு ஒற்றை கை வேண்டும். அந்த கை மனிதருக்கேயிருக்கும் பெரிய நம்பிக்’கை’. நம்பிக்கை தான் விழும் மனிதரை மீண்டும் தூக்கி நிறுத்துகிறது. அப்படி ஒருவரை தூக்கிநிறுத்தும் நம்பிக்கையை சுற்றியிருக்கும் பிறரே தரவல்லவர். நம் தோழராயிற்றே, நம் குடும்பமாயிற்றே நம் அண்ணன் தம்பி அக்கா தங்கையாயிற்றே என்ற எந்த முக அடையாளமும் உதவி செய்வதற்கு தேவையில்லை; நாம் மனிதராக இருத்தல் ஒன்றே உதவுவதற்குப் போதுமானது.

ஒரு சாதாரண மனிதரின் கடமை. பிறருக்கு உதவுதல் என்பது செய்யமுடிந்தவரின் செயத்தக்க கட்டாயக் கடமை. சுயநலத்தை வேரறுக்கும் மருந்து இந்த பிறருக்கு உதவும் உதவியில் மட்டுமே வேகமாய் பிறக்கிறது. பொறாமையில் கசங்கும் மனங்களை தெளிவுபடுத்தும் நல்லெண்ணம் இப்படி பிறரின் நன்மையைப் பற்றி சிந்திக்கையில் மட்டுமே எளிதில் சாத்தியப் படுகிறது. கையறுந்து துடிப்பவனின் ரத்தைத்தைத் துடைத்து மருந்திடுவதைவிட களமள்ளித் தரக்கேட்கும் சாமி இவ்வுலகில் எங்குமில்லை.

பிறருக்கு உதவும் தன்மையை இழப்பதென்பது தீங்கை எங்கும் பரப்புமொரு நெடிய வேதனை என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். உதவி என்பது ஏற்றுச் செய்வதென புரியாமை நம் மனிதப் பிறப்பிற்கே நேர்ந்த அல்லது வளர்ப்பில் நாம் இடறிப் போனதன் பெருத்த அவமானமென்று கொள்ளவேண்டும்.

நிறையப் பேர் சொல்கிறார்கள்; உதவி உதவி என்று ஏமாந்துப் போகுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர் இருப்பார் தானென. நன்றாக யோசித்துப் பாருங்கள், ஏமாற்றுபவர் எங்கிருந்து வந்தார்? அவரை உருவாக்கியவர் யார்?

ஒருவர் பத்து சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டால், ஒரு சட்டை கூட இல்லாது உடம்பு சுடுவோருக்கு சட்டையிட ஆசை வராதா? பின் பத்து பேர் நல்ல சட்டைகளை வைத்துகொண்டிருக்க ஒன்றோ இரண்டோ பேர் நிர்வாணமாய் திரியநேர்கையில், அப்படி திரிபவரை இந்தச் சமூகம் பார்த்து ஏளனம் செய்யும்பட்சத்தில் அல்லது ஒதுக்கவும் துணியும்பட்சத்தில் அந்த சட்டையை வாங்க வக்கில்லாதவன் திருட எண்ணத்தானே செய்வான்? எல்லோரும் பிறக்கையிலே பல அரிய திறன்களோடும் மதிக்கத்தக்க எல்லா தகுதியோடும் மட்டுமே பிறந்து விடுவதில்லை. இயலாமையின் விரக்தியில் கர்ப்பப்பை அறுபட்டு விழும் பாவக் குழந்தைகளும் இம்மண்ணிலுண்டு.

அப்படிப் பிறப்பவர்களைப் பற்றியும் சிந்தித்து, அவர்களையும் நல்வழிபடுத்துமொரு சமதர்ம நோக்கிலான வாழ்வை பொதுவில் எல்லோரும் அமைத்துக்கொள்ளும் தலையாயக் கடமைக்கு நமை நாம் தள்ளிவிடப் பட்டுள்ளதைப் புரிந்துகொள்ள பாறைகளை உடைத்துக் கொண்டுவரும் அருவியைப் போன்று, ஏழ்மையை துடைக்க எடுத்த ஆயுதத்தைப் போன்று, வாழ்வின் அசாத்தியத் தருணங்களை மாற்றி ஒரு அசாதாரண திருப்பத்தையுண்டாக்கும் ஒற்றைச் சிரிப்பின் மாயத்தை ஒவ்வொரு மனிதரும் பிறருக்கென தேக்கி மனம் முழுதும் வைத்திருப்போம். மாற்றம் ஏற்படும் நேர்கோட்டில் வருங்காலம் பயணிக்க நாம் முன்னுதாரணமாய் நடைபோடுவோம்.

ஏழை என்பவர் பிறக்கட்டும் அல்லது பிறக்காமலும் போகட்டும் சாகும் மனிதர் சுகத்தையும் அனுபவித்தவராய் சாக தனது பாதைகளையும் மாற்றுவோம். உதவி செய்பவரை உயிருள்ளளவும் நன்றியோடு நினைத்து நமக்குக் கீழுள்ளவரையேனும் நம்மளவிற்கு மேலேற்ற ஒவ்வொரு மனிதரும் முயல்வோம். மனிதத்தை மிருகத்தினுள்ளும் பாய்ச்சி மலையை உடைத்தாலும் கடுகைப் பிளந்தாலும் பகிர்ந்தே உண்ணப் பழகுவோம். வெற்றி எங்கும் பெய்யும் மழையென சாத்தியப்படும் இடமெங்கும் பெய்யட்டும். நன்மை நன்னிலமெங்கும் பூக்கும் மலர்களெனப் பூத்து வாழ்க்கை எல்லோருக்குமே சுகந்தமானதாய் மணக்க வாழ்வின் வசந்தங்கள் இந்தப் பள்ளமேட்டு பகுதியெங்கும் பாகுபாடின்றி பரவட்டும்..

உதவாதவர் எதிரியிலர்; உதவுபவர் தெய்வத்திற்குச் சமமெனப் பூரிப்படைவோம்..

பூரிப்பு பூமியெங்கும் நிலைத்திருக்க அனைத்துயிர்க்கும் வாழ்த்துக்களும் வணக்கமும். –

Leave a comment

Filed under வாழ்க்கை, Life

பட பட பட்டாசாய் – வெடிக்கும் தீபாவளி

diwali-131v
தீபங்களின் ஒளியும் .,
உங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்
ஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோச ஒளி
உங்கள் இல்லங்களில் ஒளிக்கட்டும் .!

இது வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே
அலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்
வண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்
உங்கள் இதழ்களில் மலரட்டும் .!

உங்கள் மேனி தொடும் புது ஆடைகளின்
அழகில் மயங்கி சாலையோரா பூக்கள்கூட
வெட்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .!

தூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்
ஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து
சத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளையும்
தித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்
மகிழ்ச்சியின் முகவரியை அறிமுகப்படுதுங்கள். !

சுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய் கிடக்கும்
சங்கு சக்கரங்களிடம் கால் வலிக்கிறதா ?
என்று கேட்டு ஆறுதல் கூறுங்கள் .!

முடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து .
கவிதை பேசும் நிலவுடன் கூடிய
இனிய இரவுகளை நீளச் செய்யுங்கள்.!

இந்த இனிய இரவினில் இன்னும்
உறங்கிக்கொண்டிருக்கும் உங்கள் வீட்டு
விலங்குகளை எழுப்பி அவற்றிற்கு
முகம் கழுவி புதுப்பொலிவு ஏற்றி சற்று சிரிக்கச் சொல்லி
இரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .!

சத்தம் போட்டு வெடிக்கப்போகும் பட்டாசுளை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத
எறும்புகளிடம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்
என்று அதன் காதுகளில் இரகசியமாய் ஓதுங்கள் .!

இயன்றால் கண்களில் தென்படும் அனைத்துப்
பறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .!
எறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள்.

சத்தமாய் வீசும் காற்றை அதட்டி
சற்று அமைதியாய் இருக்க சொல்லுங்கள் .

ஊனமென்று கூறிய உதடுகள் உறைந்துபோகும்வரை
இயலாதவர்களுக்கு ஊன்றுக்கோலாய் இருங்கள். !

இப்படி இயன்ற அளவில் இன்று
ஒருநாள் புதுமை பரப்புங்கள்.

பார்க்கும் விழிகள் எதுவும் உங்களை
பார்க்காது கடந்து சென்றாள் ஒன்றாய் சேர்ந்து
சத்தமாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் !!!

– பனித்துளி சங்கர்

Leave a comment

Filed under Deepavali, Diwali, Life

திருக்குரல் – கடவுள் ஏன் கல்லானான்

சுடலை

இப்பொழுது இல்லா இறைவன் இகபரத்தில்
எப்பொழுதும் இல்லா இறைவன்

தெய்வம் தொழுதாலும் சாவு வருவதால்
தெய்வம் தொழாமலே சா

கனவில் கடவுள் வருவதோ உண்மை
நனவில் வராததோ நன்மை

அருமை அறிவால் கடவுள் ஒழிப்போர்
பெருமை புகழுடன் வாழ்வர்

குற்றமாம் தெய்வம் தொழாது இருப்பதே
பெற்ற பிறப்பின் சிறப்பு

இடம்பொருள் காலமும் ஏவி திடமாய்
கடவுளை இல்லாமல் ஆக்கு

கடவுளை கல்லாய் சபித்த மனிதன்
திடமான சொல்லால்வாழ் வான்

துன்பம் தரும்தெய்வம் என்றும் மறப்போர்க்கு
இன்பம் எளிதாய் கிடைக்கும்

துன்பநோய் என்ற இறைப்பேய் எதற்குத்தான்
என்றும் மனிதனுக்குத் தேவை

பொருளான சொல்லால் கடவுளை என்றும்
பொருளிலாத சொல்லாக மாற்று

உருவிலி தெய்வத்தை எஞ்ஞான்றும் எண்ணி
உருகாது வாழ்தலே நன்று

செத்த கடவுளை எப்பொழுதும் எண்ணியே
பித்தனாய் வாழவோ கல்வி

தேவையாய் தெய்வத்தைத் தேடினால் சாவுவரை
நோவுதான் வாழ்வாய் அமையும்

கடவுளைக் கொன்றால் மனிதனுக்கு வாழ்வுவரும்
இல்லையேல் கேடே வரும்

கண்காணா தெய்வத்தை எண்ணாலும் ஏனை
எழுத்தாலும் எப்பொழுதும் வீழ்த்து

கடவுள் எனும்சொல்லும் எம்மலமும் ஒன்றென
வாழ்வை உணர்ந்துகொண் டாடு

மனிதநேயம் கொன்று கடவுள் தொழுதால்
மனிதனுக்கு துன்பம் உறுதி

மனிதநேயம் ஆதரித்து தெய்வத்தைக் கொன்றால்
மனிதனுக்கு இன்பம் உறுதி

அகர முதல எழுத்துயாவும் அந்த
பகவானைக் கொல்ல உதவும்

எனக்கு இறப்பு உறுதியெனில் தெய்வ
முனக்கும் இறப்பு உறுதி

– கிருஷ்ணன் மகாதேவன்

Leave a comment

Filed under God, Life

தோல்விகளுக்கு நன்றி!

Man on top of mountain. Element of design.

Man on top of mountain. Element of design.

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்….

இந்த வரிகளை எங்கோ படித்ததுபோல இருக்கிறதா? விக்கிரமாதித்தன் கதையின் ஆரம்ப வரிகள் இவை. எத்தனை முறை எத்தனை கதைகள் படித்திருப்போம். வேதாளம் கதை சொல்லுவதும், இறுதியில் அது கேட்கும் கேள்விகளுக்கு விக்கிரமாதித்தன் சரியான பதில் சொல்ல மறுபடி வேதாளம் முருங்கை மரம் (வேப்பமரம்?) ஏறுவதும், பதுமைகள் சொல்லும் கதைகளுமாக நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு சென்று விடும் இந்தக் கதைகள். நான் இதில் முக்கியமாக சொல்ல விரும்புவது ‘தன் முயற்சியில் சற்றும் தளராத’ என்கிற வார்த்தைகளைத்தான்.

குழந்தைகளுக்கு இந்த சற்றும் தளராத முயற்சியை சொல்லிக் கொடுங்கள். இன்று உலகப்புகழ் பெற்ற எல்லோருக்கும் பின்னால் இந்த தளராத முயற்சி இருந்திருக்கிறது. இனி வெற்றி பெறப்போகிறவர்களுக்கும் இந்த தளராத முயற்சி மிகவும் தேவை.

வெற்றியின் மிதான வெறி

சரியும் தவறும் கலந்துதான் வாழ்க்கை வெற்றியும் தோல்வியும் இணைந்திருப்பதுதான் இயல்பு ஒன்றை மட்டும் கொண்டவர்கள் யாரும் இல்லை வெற்றியை மட்டும் தனியாகப்பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகிவிட்டன. இதைப்படி இதைக்குடி இதைவாங்கு இங்கு செல் இவரிடம் போ என்றெல்லாம் பிரித்து பிரித்து சந்தையைப் பிடித்துகொண்டதன் காரணம் நமக்கு வெற்றியினன் மீது இருக்கிற வெறிதான் படிக்காதவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்காதவர்கள் நல்ல வேலை கிடைக்காதவர்கள் பணம் சம்பாதிக்காதவர்கள் சொத்து சேர்க்காதவர்கள் இவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிட்டோம் அப்படிஎன்றால் படிப்பு வேலை சொத்து சேர்த்தவர்கள் முழுமையாக வெற்றியாளர்களா பின் ஏன் இவர்களில் பலரிடம் இத்தனை வியாதிகள் விவகாரத்துகள் விவகாரங்கள் இவையெல்லாம் தோல்விகள் இல்லையா?

நம்பிக்கையே மருந்து

யோசித்துப்பார்த்தால்  வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை வாழ்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி அது தவறினாலோ அல்லது தாமதமானலோ அதை தோல்வி என்று சொல்கிறோம் அவ்வளவுதான். எந்த தோல்வியும் பெரிதல்ல அதைப் பூதாகரமாக ஆக்கிவிடுவது நம் எண்ணங்கள்தான் அந்தந்தப்பருவத்தில் பெரிதாக தெரியும் தோல்விகள் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும். மதிப்பெண்கள் குறைவதும் காதல் கை கூடாததும் அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பவை ஆனால் அதைக்கடந்தும் வாழ்கை ஓடும் அதைவிடச்சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும் நாளைப்பற்றியை நம்பிக்கைதான் நேற்றைய காயங்களுக்கு மருந்து.

தோல்விகளுக்கு நன்றி:

மரணம் நிகழ்ந்த வீட்டிலும் காபி குடிக்கிறார்கள் விபத்து நடந்த இடத்தில் சில நிமிடங்களில் போக்குவரத்து சகஐமாகிறது இயற்கை சீற்றம் நிகழ்ந்த இடம் சுற்றுலா மையம் ஆகிறது எல்லா இழப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் ஈடு செய்யப்படுகின்றன.

உங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி விழும்போது அங்கு வழுக்கல் அதிகம் பார்த்துப்போ என்று சொல்லாமல் சொல்கிறார் உங்கள் விபத்தை தடுக்கிறார்.

உங்களுக்கு கிடைத்த அனைத்து தோல்விகளுக்கும் நன்றி செலுத்துங்கள். உங்கள் தோல்விக்கு காரணமான அனைவரையும் மனதாரப்பாராட்டி நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள். வெற்றியை தலைக்கு மேலே எடுத்துக்கொள்ள வேண்டாம், தோல்வியை மனதுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டாம் இரவும் பகலும் போல வெற்றி தோல்வி மாறி மாறி வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொள்வோம். வாழ்க வளமுடன்

2 Comments

Filed under தோல்வி, வாழ்க்கை, வெற்றி, Life

சின்னஞ்சிறு கிளியே…

Barathiyar

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
தேனே.. ஆடி வரும் தேனே…
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

உச்சிதனை முகர்ந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி..
மேனி சிலிர்க்குதடி..

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி..
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி.
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி (உன்னைத் )

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

                                                                  – மகாகவி சுப்பிரமணிய பாரதி

Leave a comment

Filed under Bharathiyar, Poem

தன்னம்பிக்கை

a93fe07830c7a1ded35bff4fcc2452ea

மலர்ந்த பூக்களெல்லாம்
மாலைகளாய் ஆவதில்லை
வளர்ந்த மரங்களெல்லாம்
வாசற்கதவுகளாய் ஆவதில்லை… !

விளைந்த கற்களெல்லாம்
மோதிரமாய் ஆவதில்லை
விழுந்த மழைத்துளிகளெல்லாம்
உயித்துளியாய் ஆவதில்லை… !

எழுதும் வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் ஆவதில்லை
உழுத நிலங்களெல்லாம்
விளைச்சல்களாய் ஆவதில்லை… !

பிறந்த மனிதர்களெல்லாம்
மேதைகளாய் ஆவதில்லை
திறந்த மனங்களெல்லாம்
புனிதர்களாய் ஆவதில்லை… !

நேசித்த இதயங்களெல்லாம்
காதலாக ஆவதில்லை
வாசித்த இசைகளெல்லாம்
சிம்பொனியாய் ஆவதில்லை… !

இணைந்த கைகளெல்லாம்
நம்பிக்கையாய் ஆவதில்லை
மணந்த பெண்களெல்லாம்
மல்லிகையாய் ஆவதில்லை… !

தொடங்கும் கட்சிகளெல்லாம்
ஆட்சிகளாய் ஆவதில்லை
இசைக்கும் பாடல்களெல்லாம்
விருதுகளாய் ஆவதில்லை… !

செய்த சிலைகளெல்லாம்
தெய்வங்களாய் ஆவதில்லை
புனைந்த கவிகளெல்லாம்
பரிசுகளாய் ஆவதில்லை…!

— நாகூர் கவி

Leave a comment

Filed under வாழ்க்கை, Life

கனவு புகட்டிய பாடம்

கனவு

தூக்கம்..!

உடலின்
தற்காலிக மரணம்.
மூளையின்
தற்காலிக சுதந்திரம்.

நம் உடலை
மரணிக்கவைத்து
மூளை எழுதும்
மகாகாவியமே கனவுகள்..!

நேற்றிரவு என்னை
மரணிக்க ஊதியது
கொட்டாவி சங்கு..!

என்னுடல் மரணித்தது
எனதுமூளை என்னிடமிருந்து
விடுதலை அடைந்து
விடைதேடி அலைபாய்ந்தது

எனது மூளை
கனவு காட்டில்
ஆடிய ஆட்டத்தை..!
இதோ …!
காட்சிப்படுத்துகிறேன்

மிக நீண்டதொரு தாள்
இந்த பிரபஞ்சத்தின்
அளவை மிஞ்சியிருக்கும்.

ஒரு அழகான எழுதுகோல்
அந்த பாரதியின்
மீசையின் பாதியளவு இருக்கும்.

அந்த சூரியனிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
அக்னி மையும்.
அந்த நிலவிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
குளிர் மையும்.
எழுதுகோலின் உடலுக்குள்
ஊற்றி மூடியிருக்கும்.

எழுதும் தாளின்
தலைப்பு தேடியே
தலை வெடித்தது
எப்படி இறுதிவரை
எழுத முடியுமோ..?

என் மூளை குழம்பிய
மூன்றாவது நிமிடம்
தமிழ் அன்னை
வானத்திரையில் காட்சியளித்தாள்..!

தமிழ் அன்னையை
வணங்கிய மூளை
உளர ஆரம்பித்தது…!

தாயே…….!
அமுதே…!
உனை எப்படி போற்றுவேன்?
எதை சொல்லி எழுதுவேன்?
வள்ளுவனின் குறள்களும்
நினைவில் இல்லை
பாரதியின் பாடல்களும்
நினைவில் இல்லை.
கம்பனின் கட்டுத்தறியும்
என்னிடமில்லை

மொழியறிவும் எனக்கில்லை
இலக்கணமும் தெரியவில்லை
இலக்கியமும் படித்ததில்லை
என்செய்வேன் தாயே… ?
என் தமிழ்தாயே…!

ஐய்யகோ…! தமிழனா நான்..?
தமிழறிவு முழுவதுமாய் இல்லையே..!
நானா தமிழன்………..?
பிழையின்றி கவியெழுத தெரியவில்லையே..!
நானா தமிழன்…………?

தாயே …………..!
என்னை மன்னித்துவிடு!
இந்த நொடியிலே
எனை கொன்றுவிடு !

அழகாய் புன்னகைத்த
தமிழ் அன்னை.

தமிழனே………!
கற்றுகொள்ளும் ஆர்வமிருக்க
கத்திக்கொண்டு ஆர்ப்பரிக்கிறாயே
ஏனடா மகனே… ? என்னாயிற்று?
பொறுமை ! பொறுமை !!
ஆவேசப்படாதே……!

வரமென்ன வேண்டும்
கேள்..! அருளுகிறேன் “

உனைப்போற்றி எழுதிட
உனை வான் அளவு
புகழ்ந்து எழுதிட
ஒரளவாயிருக்கும்
என் மொழியறிவு
மலையளவு
வளர்ந்திடவேண்டும்
வரம் தருவாயா ? தாயே !
என் தமிழ் தாயே..!

மீண்டும் புன்னகை பூத்தாள்
என் இனிய தமிழ் அன்னை.

”தமிழனே….!
மகனே…!

இலக்கணம் கற்று
இலக்கணம் எழுது
இலக்கியம் படி..!
இலக்கியம் படை..!

பிறமொழியின் தூசியை
என்விழியில் தூவாதே..!

புலமை பெற்று
புது கவிதை எழுதினாலும்
மரபு கவிதையை மறவாதே..!

இதனை பின்பற்று !
என் வரம்
பின்பு வரும்.

மீண்டும் சந்திப்போம்!..”

மெலிதாய் புன்னகைத்தே
மெதுவாய் தன்னை
மறைத்துகொண்டாள்
தமிழ் அன்னை.!

பிரபஞ்சத்தை மிஞ்சிய
நீண்ட தாளையும்
பாரதியின் மீசையளவு
எழுதுகோலையும்
பத்திரப்படுத்திய மூளை..

என்னுடலை
தட்டியெழுப்பியது
கனவு கலைந்தது
என்னுள் ஏதோ
புதியதாய் ஒரு தெளிவு..!

உயிரெழுத்து
மெய்யெழுத்து
உயிர்மெய்யெழுத்து
ஆயுத எழுத்து
மீண்டும் படித்து
எழுதிட எழுதுகோலை
தேட கட்டளையிட்டது
கனவு கண்ட என் மூளை…!

— இரா. சந்தோஷ் குமார்

Leave a comment

Filed under வாழ்க்கை, Life